
பிராத்தல்: ஆண்கள் தம் செக்ஸ் தேவைகளை,(மனைவியல்லாத) பெண்களிடம், பணம் கொடுத்து பூர்த்தி செய்துக்கொள்ளும் கட்டிடம் அல்லது இடம்!
சோனாகாச்சி! கொல்கொத்தா நகரின் மிகப்பெரிய சிவப்புவிளக்கு பகுதி. மகா நதி திரைப்படத்தில், கமலின் மகள் விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் காட்சி நினைவுக்கு வருகிறதா? அதே இடம் தான்!
இப்போது நாம் காணப்போகும் காணொளி 'Born into Brothels' என்ற பெயருடையது. நம்மில் நிறையப்பேர் ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும். 2005 வருடத்தின் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றப் படம். அது மட்டுமல்லாது பல சர்வதேச விருதுகளை குவித்துள்ளது. இதன் இயக்குனர்கள் சானா பிரிஸ்கி & ராஸ் கவுஃப்மேன். சோனாகாச்சி பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளைச் சுற்றி வரும் கேமராக் கவிதை! ஆனால் இந்தக் கவிதை நம்மை கண்கலங்கவைக்கும்... தடுமாறவைக்கும்.... நேழ்ச்சியுறவைக்கும் அதுமட்டுமல்லாது, புன்னகைக்கவும் வைக்கும்! என்னதான் நம்ம நாடு வளரும் நாடுகளிலேயே முன்னணி நாடு என்று சொன்னாலும், இதுப்போன்ற சமுதாயத்தின் கரும்பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. காணும்போது நம் மனது கஷ்டப்படுகிறது.
பிரிட்டனில் பிறந்து, நியூ யார்க் நகரில் வாழும் புகைப்படக் கலைஞரான சானா பிரிஸ்கி (Zana Briski) 1997 ஆம் வருடம், கொல்கத்தாவின் பாலியல் தொழிலாளிகளை புகைப்படமெடுக்க வந்தார். வந்தவர் அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்ந்து வரும்போது, அங்கு அவரை 'சானா ஆண்ட்டி' என்று அன்போடு அழைத்து, அவரை சுற்றி வந்த சிறுவர், சிறுமிகளிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு நில்லாமல், அவர்களில் எட்டு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'Point & shoot - 35 mm' கேமராக்களை வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கு அடிப்படை புகைப்பட தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதற்காக Kids with Cameras என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அவர்களின் படிப்பு மற்றும் பயிற்சி போன்றவற்றை கவனித்துக்கொண்டார். அந்த பிள்ளைகளை வைத்து, கொல்கத்தா நகரின் தினசரி வாழ்கையை, மனிதர்களை புகைப்படங்களாக மாற்றினார். ஆஹா! அந்த சொப்புப்பெட்டிக் கேமராக்களில், அந்தக் குழந்தைகள் வடித்துள்ள வண்ணக் கலவைகளை , இன்றுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்கள் கொடுக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்! இப்படி ,அதன் பின்னணியை, அந்த பிள்ளைகளின் அன்றாட வாழ்கையை , தன் சக இயக்குனரான ராஸ் கவுஃப்மேனோடு (Ross Kouffman) சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த காணொளியை காவியமாகியுள்ளார்,
இந்த காணொளியை பார்த்தபிறகு, எவ்வளவு கோபம் வந்தாலும், துரோகிகளையும், வேண்டாத யாரையும் 'தே... பயல் ' என்று தீந்தமிழிலோ, அல்லது போம்ப டீசண்டாக ஆங்கிலத்திலேயோ, மறந்தும் திட்டக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி திட்டுவது அந்த பாவமறியா, அற்புத குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அவமானமாக, அநீதியாக கருதுகிறேன்.
அந்த படைப்பைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம். ரெடியா நண்பர்களே. உங்களின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிதானமாக வந்தால் நல்லது.
சானா பிரிஸ்கியின் சோனாகாச்சி புகைப்படங்கள்.
சிறுவன் அவ்ஜீத் ஹல்தர் இன்று (2008)..... [ காணொளியை பார்த்த பிறகு வந்தால்தான் புரியும்]
No comments:
Post a Comment
ஊக்க உரைகள்